மயிலாடுதுறை, : மன்னை ஜோத்பூர் எக்ஸ்பிரசை வாரம் இருமுறை இயக்கவேண்டும் என்று மயிலாடுதுறை பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார்குடியிலிருந்து ஜோத்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்தபோது மயிலாடுதுறை ரயில் பயணிகள் நலச் சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன் தலைமையில் நாஞ்சில் பாலு, கோவிசேதுராமன், முத்துக்குமரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் வரவேற்பளித்தனர்.
அப்போது வக்கீல் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘இந்த ரயில் மன்னார்குடியிலிருந்து தஞ்சை, திருச்சி வழியாக செல்ல எடுக்கப்பட்ட முடிவை மாற்றி, பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று மன்னார்குடி- ஜோத்பூர் ரயில் இயக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியிலிருந்து ஜோத்பூர் செல்ல 51 மணி நேரமாகிறது. இதை 45 மணி நேரமாக மாற்ற வேண்டும். மேலும் இந்த ரயிலை வாரம் இருமுறை இயக்கவேண்டும். பொதுப் பயணிகள் பெட்டி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.