பொள்ளாச்சி-பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல் செவ்வாய்க்கிழமை அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி-பாலக்காடு இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கியது. ரூ. 350 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வந்த பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.
இதையடுத்து இப்பாதையில் ரயில் இன்ஜின்கள் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல் திங்கள்கிழமை பாலக்காட்டில் இருந்து முதலமடை வரையிலும், செவ்வாய்க்கிழமை பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வரையிலும்...
more... டிராலி மூலம் வந்து ரயில் பாதையில் சோதனை மேற்கொண்டார்.
சோதனைக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மாலை பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு 4 பெட்டிகளுடன் கூடிய இன்ஜின் 90 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து எஸ்.கே.மிட்டல் கூறுகையில், "பொள்ளாச்சி முதல் பாலக்காடு வரை டிராலி மூலம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் பயணிகளின் பாதுகாப்பான பயணம் பரிசோதிக்கப்பட்டது. மேலும், பெட்டிகளுடன் அதிவேகத்திலும் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. பணிகள் திருப்திகரமாக உள்ளதால், 15 நாள்களுக்கு ரயில் இயக்க வாய்ப்புள்ளது' என்றார்.
இந்த ஆய்வின்போது, மதிமுக இளைஞர் அணிச்செயலாளர் ஈஸ்வரன், பொள்ளாச்சி நகரச் செயலர் துரைபாய், நகர்மன்ற உறுப்பினர் முரளி ஆகியோர் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் கோயில்பாளையத்தில் ரயில்வே நிறுத்தம் அமைக்க நடவடிகை எடுக்க வேண்டுமென எஸ்.கே.மிட்டலிடம் கோரிக்கை வைத்தனர்.
தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் பி.கே.மிஸ்ரா, பாலக்காடு கோட்டமேலாளர் ஆனந்தபிரசாத், முதன்மைப் பொறியாளர் பிரபுல்லவர்மா, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.