நீலகிரியின் அழகை ரசிக்க மலைரெயில் பயணத்தை விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
குன்னூர்,
நீலகிரியின் அழகை ரசிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
மலைகளின் ராணி
மலைகளின்...
more... ராணி என்று வர்ணிக்கப்படுவது நீலகிரி. மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான மே மாதத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, கோடை விழா, படகு போட்டி, படகு அலங்கார அணிவகுப்பு, குன்னூரில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி போன்றவை நடத்தப்படும். இதை கண்டு ரசிக்க நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து விடுவார்கள்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
தற்போது நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு சீதோஷண நிலையாக இருந்து வருகிறது. இந்த பனிப்பொழிவு காலத்தில் வெளிநாடுகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. அந்த நிலை நீலகிரி மாவட்டத்தில் தற்போது உள்ள பனிப்பொழிவை ஒத்து இருக்கிறது. இதன் காரணமாக மாவட்டத்துக்கு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மலைரெயில் போக்குவரத்தையே விரும்புகிறார்கள். மலைரெயில் பயணத்தின்போது இயற்கை அழகை ரசித்தவாறு பயணம் செய்கிறார்கள்.
மலை ரெயில் சேவை
நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே இந்த மலை ரெயில் சேவை அமைந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து 4 பெட்டிகளுடன் பர்னஸ் நீராவி என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டு குன்னூர் வருகிறது.
அதன் பின்னர் குன்னூரில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு ஊட்டிக்கு டீசல் என்ஜின் மூலம் ரெயில் புறப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வமுடன் பயணம் செய்கிறார்கள். தற்போது ஊட்டி, குன்னூர் பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வர முன்பதிவு செய்தும், முன்பதிவு இல்லாமல் ஆர்வத்துடன் பயணம் செல்கிறார்கள்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர் வந்து மலை ரெயிலில் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருந்தனர். அவர்கள் மேட்டுப்பாளையம்– ஊட்டி வரை உள்ள இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து கண்டு ரசித்தனர். குன்னூர் ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் இறங்கி அங்கும் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 ஆயித்து 810 பேரும், நேற்று சுமார் 6 ஆயிரம் பேர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேப்போல் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா நீர் வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.