மெட்ரோ ரயில் வழித்தடம் தயார்:அடுத்த சில நாட்களில் சேவை துவக்கம் மெட்ரோ ரயில் சேவையை உடனடியாக துவக்குவதற்கு வசதியாக, வரும், 29ம் தேதிக்குள் மெட்ரோ ரயில் வழித்தட ஆய்வு முடிக்கப்படுகிறது; அடுத்த சில நாட்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்துார் இடையே, முதற்கட்டமாக, 10 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது.
பாதுகாப்பு ஆய்வு :
இந்த வழித்தடத்தில், கோயம்பேடு - அசோக் நகர் இடையே, 7.22 கி.மீ., துாரத்திற்கு பாதுகாப்பு ஆய்வு முடிந்து விட்டது. அசோக்...
more... நகர் - ஆலந்துார் இடையே, 2.88 கி.மீ., துாரத்திற்கு ஆய்வு மேற்கொள்ள தடையாக இருந்த, மெட்ரோ ரயில் சேவைக்கான பொது விதிமுறைகள் - 2013ல் திருத்தம் செய்யப்பட்டு விட்டது.இதனால், கோயம்பேடு - ஆலந்துார் இடையே, மெட்ரோ ரயில் சேவையை துவக்குவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது. முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின், பல நலத்திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அதில், மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. ஆகையால், மெட்ரோ ரயில் இறுதிகட்ட பாதுகாப்பு ஆய்வை, வரும் வாரத்தில் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விதிமுறைகளில் திருத்தம் :
வரும் 29ம் தேதிக்குள், அசோக் நகர் - ஆலந்துார் இடையே, பாதுகாப்பு ஆய்வை முடிக்க உள்ளோம். விதிமுறைகளில் திருத்தம் செய்து விட்டதால், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல், ஆய்வு நடத்தும் அன்றைய தினமே அனுமதி வழங்கி விடுவார். இதனால், வரும் 29ம் தேதிக்குள், வழித்தடம் தயாராகி விடும். இதுகுறித்து, அரசுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்.மெட்ரோ ரயில் சேவை துவக்க, தேதியை அரசு முடிவு செய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்