அந்தியோதயா ரயில்கள் மார்ச் முதல் இயக்கம் : தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: ரயில்வே அட்டவணையில் வெளியிடப்பட்ட நெல்லை - சென்னை அந்தியோதயா ரயில்கள் வரும் மார்ச் மாதம் முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கும்பகோணம் ரயில் நிலைய கால அட்டவணையில் மார்ச் 1ம் தேதி ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் வெளியான ரயில்வே கால அட்டவணையில் நெல்லை மாவட்டத்தை மையமாக கொண்டு சென்னைக்கு இரு அந்தியோதயா ரயில்கள் ரயில்கள் அறிவிக்கப்பட்டன. சாமான்ய மக்கள் பயன்படுத்தும் வகையில் இவ்விரு அந்தியோதயா ரயில்களும் முழுக்க முழுக்க முன்பதிவற்ற பெட்டிகளை கொண்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.
நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து 2ம் வகுப்பு சாதாரண பெட்டிகளை கொண்டு தினசரி ரயில்களாக இவை தாம்பரத்திற்கு இயக்கப்பட உள்ளன. இவ்விரு ரயில்களுக்கான நேர...
more... அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. அதன்படி நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் அந்தியோதயா ரயில், மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் போய் சேரும். மறுமார்க்கமாக சென்னை தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் அந்தியோதயா ரயில், மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு நெல்லை வந்து சேரும். செங்கோட்டையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் அதே நாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரம் போய் சேரும்.
தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் முன்பதிவற்ற ரயில் அதே நாள் இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை சென்று அடையும். பஸ் கட்டணம் உயர்ந்த நாளில் இருந்தே அந்தியோதயா ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. மேலும் இந்த ரயில்கள் வழக்கமான பாதையை தவிர்த்து டெல்டா மாவட்டங்கள் வழியாக இயக்கப்படுவதால், அப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். தென்மாவட்டங்களிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தற்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம், கும்பகோணம், திருநள்ளாறு என கோயில் நகரங்களுக்கு செல்லும் பல பயணிகள் செந்தூர் எக்ஸ்பிரசை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் முதல் அந்தியோதயா ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தியோதயா ரயில் செல்லும் ரயில் நிலையங்களில் ஒன்றான கும்பகோணத்தில், வரும் மார்ச் 1ம் தேதி முதல் நெல்லை தாம்பரம், செங்கோட்டை தாம்பரம் அந்தியோதயா ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் பலகையில் எழுதப்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்டங்கள் மட்டுமல்லாது, டெல்டா மாவட்ட பயணிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘வரும் மார்ச் 1ம் தேதி முதல் தெற்கு ரயில்வேயில் பல மாற்றங்கள் நடக்கின்றன. சாலிமார் எக்ஸ்பிரஸ், பாட்னா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில வாராந்திர ரயில்கள் மார்ச் மாதத்தில் சென்னை சென்ட்ரல் செல்வதை தவிர்த்து செல்கின்றன.
வரும் 1ம் தேதி முதல் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் தஞ்சாவூர் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டு 120 நாட்கள் (4 மாதம்) வரும் மார்ச்சில் முடிவதால், தெற்கு ரயில்வே மெல்ல மெல்ல கால அட்டவணையை செயல்படுத்த உள்ளது. அந்தியோதயா ரயில்களும் வரும் மார்ச் 1ம் தேதி முதலே இயக்கப்பட வாய்ப்புள்ளது. கும்பகோணம் ரயில் நிலையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதை உறுதி செய்கிறது. மார்ச் மாதம் நிறைவு பெறுவதற்குள் நெல்லை மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தி வரும் என நம்புகிறோம்’’என்றார். அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படும் ரயில்கள் குறித்த அறிவிப்பு நெல்லை, செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இன்னமும் வந்து சேரவில்லை. தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களாக ஒரு அந்தியோதயா ரயிலுக்கான ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதை கொண்டு முதலில் செங்கோட்டை தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிகிறது. அதை தொடர்ந்தே நெல்லை தாம்பரம் மார்க்கத்தில் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளது.