குடந்தை ரயில் நிலையத்தில் மரங்கள் வெட்டி சாய்ப்பு பயணிகள் வேதனை
கும்பகோணம்,மே 26: கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள மரங்களை வெட்டிய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்துக்கு நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட ரயில் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து செல்கின்றனர். கும்பகோணம் ரயில் நிலையத்தில் முகப்பு பகுதியில் புல்வெளி பூங்கா, அலங்கார மின்விளக்கு, உயர்மின் கோபுர விளக்கு, செயற்கை நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் தூய்மையை பராமரிப்பதில் கடந்த 2016ம் ஆண்டு அகில இந்திய அளவில் 5வது இடத்தையும், தெற்கு ரயில்வே அளவில் முதலிடத்தையும், கடந்த 201 ம் ஆண்டு அகில இந்திய அளவில் 22 வது இடத்தையும், தெற்கு ரயில்வே இடத்தில் 5வது இடத்தையும் பிடித்தது. இந்நிலையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முகப்பு பகுதியில் விளம்பரத்துக்காக தனியார் ஏஜென்சி அலங்கார வளைவு அமைத்திருந்தது.
கும்பகோணம்...
more... ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள பூங்காவில் 20க்கும் மேற்பட்ட வேப்பமரக்கன்றுகள் வளர்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மரமாக வளர்ந்திருந்த வேப்பமரங்களை ரயில்வே நிர்வாகத்தினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் வேதனையடைந்த பயணிகள் மரங்களை வெட்டிய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கும்பகோணம் ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள விளம்பரதாரர் பெயர் மறைப்பதாக, விளம்பர ஏஜென்சி கூறியதன்பேரில் அங்கிருந்து 20க்கும் மேற்பட்ட வேப்பமரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது என்றனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் கூறுகையில்,
ரயில் நிலையங்களில் மரங்களை வளர்க்க வேண்டும் என நிர்வாகம் கூறியுள்ள நிலையில், கும்பகோணத்தில் நன்றாக வளர்க்கப்பட்ட மரங்களை தனியார் நிறுவனத்தின் தூண்டுதலின் பேரில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனவே வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் மீண்டும் அங்கு மரங்களை நட வேண்டும். இதுபோல் இனி வரும் காலங்களில் மரங்களை வெட்டக்கூடாது. மீறி மரங்களை வெட்டும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.