முதல் பொள்ளாச்சி-போத்தனூர் வரையிலான அகல ரயில் பாதை பணிகள் பல ஆண்டுகளாக நிறைவு பெறாமல் இருந்த நிலையில், கடந்த சில மாதத்துக்கு முன் திண்டுக்கல் முதல் பழனி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டது.
பழனியில் இருந்து திண்டுக்கல் வரையில் தற்போது இயங்கி வரும் ரயில், பயணிகள் மத்தியிலும், பக்தர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை சென்னை தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் நாராயணன், மதுரை மண்டல மேலாளர் ரஸ்தோகி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முன்னதாக, அதிகாரிகள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர், கூடுதல் பொது மேலாளர் நாராயணன் தெரிவித்தது:
பழனி முதல் திண்டுக்கல் வரையிலான ரயில் போக்குவரத்து மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பழனியில் இருந்து பொள்ளாச்சி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுவிட்டது.
எனவே, வரும் ஜூன் மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் முடிந்ததும், ரயில்வே பாதுகாப்புக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து துவங்கும்.
பொள்ளாச்சி முதல் போத்தனூர் வரையிலான அகல ரயில் பாதையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 10 கி.மீ. தூர அகல ரயில் பாதை பணிக்காக சுமார் 20 ஏக்கர் வரையிலும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இது முடிந்தால் மட்டுமே போத்தனூர் வரை பணிகள் மேற்கொள்ள முடியும்.
பழனி-ஈரோடு அகல ரயில் பாதை நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இப்பகுதியில் ரயில் போக்குவரத்துக்கு போதிய வருமானம் இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. எனினும், எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தினால் திட்டம் செயல்படுத்தப்படும்.
2013-14 இல் பழனி முதல் சென்னை மற்றும் திருச்செந்தூருக்கான ரயில் போக்குவரத்து உள்ளிட்ட 4 புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் துவங்க பல மாதங்களாகும்.
கடந்த பட்ஜெட்டின்போது, ரயில்வே சார்பில் காட்சிகுடா முதல் மதுரை வரையில் வாரத்துக்கு ஒருமுறை இயக்கும் புதிய ரயில் வழித்தடமும், டேராடூன் முதல் சென்னை வரையில் இயக்கும் ரயிலை மதுரை வரை நீட்டிக்கும் வழித்தடமும் பயன்பாட்டுக்கு கொண்டுவர தயார் நிலையில் உள்ளது.
மதுரையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரியிடம் இந்த வழித்தடங்களை இயக்குவதற்கான தேதி கேட்டுள்ளோம். அவர் தெரிவித்தவுடன் ரயில் போக்குவரத்து துவங்கிவிடும் எனத் தெரிவித்தார்.
பேட்டியின்போது, ரயில்வே துறை பொறியாளர்கள், பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.
click here